2ஜி வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத கனிமொழிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பின்னர் ரத்து செய்த நீதிபதி.

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். முன்னதாக இவ்வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றபோது சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர் தனது வாதத்தை தொடங்க கால அவகாசம் கேட்டார். அதே போல் ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பால்வா தரப்பு இரண்டு சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் இறுதி வாதத்தை எப்படி தொடங்க முடியும் என்று கேள்வியெழுப்பியது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி., இறுதி வாதம் வரும் டிசம்பர் 19-ந் தேதி தொடங்கும் என அறிவித்தார். 

கனிமொழிக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விசாரணையின் போது கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோரினார். மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து கனிமொழிக்கு விலக்கு அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்

0 comments:

Post a Comment