கனிமொழியை நம்பி சரணடைந்த புலிகள்.. கருணாநிதி பதில் சொல்வாரா? ஓ.பி.எஸ். கேள்வி
தி.மு.க. எம்.பி. கனிமொழியை நம்பி விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக கொல்லப்படுவதற்கு கருணாநிதியின் செயல்கள் தான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார்கள். தனது உண்ணாவிரத நாடகத்திற்குப் பின்னர், இலங்கை தமிழர்களுக்கெதிரான போரை இலங்கை அரசு நிறுத்திக் கொண்டது என்ற கருணாநிதியின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளிலிருந்து வெளி வந்த தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை யாரும் மறந்திட முடியாது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் இறுதிப் போர் உச்ச கட்டத்தில் இருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ந் தேதி இரவு 8 மணிக்கு புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை பகுதி அரசியல் பிரிவு தலைவர் சசிதரன் சேட்டிலைட் தொலைபேசி மூலம் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது விடுதலைப் புலிகளை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு உத்தரவாதம் தருவதாக கனிமொழி பேசியதாகவும், அதை நம்பியே சசிதரனும் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளும், மே மாதம் 18ஆம் தேதி சரணடைந்தனர் என்றும் இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாரே! இந்தக் குற்றசாட்டுக்கான பதிலை கருணாநிதி முதலில் தெரிவிக்கட்டும். அதை விடுத்து கற்பனையான குற்றசாட்டுகளை தமிழக அரசு மீது தெரிவிக்க வேண்டாம் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.












0 comments:
Post a Comment